விழா

முத்து நிலாப்பொழியும் முற்றம் நெடுந்தொலைவில்
கத்துங் குயிலின் கனிப்பாடல்
குத்து
விளக்கெரியும் வண்ண விழாமேடை! ஆங்கே
உளக்கனியில் தேன்கொண்ட ஊர்!

வெள்ளி ஒளித் தூண்கள்! மேலே மணிக்கூரை!
கொள்ளை அழகு நிறைகோவில்!
உள்ளே
இருக்கை பசும்பொன்! எழில்சேர் இரவின்
திருக்கோலம் வேறு சிறப்பு!

தங்க நகையாள் தமிழ்க்கன்னி தேன்பாவை
பொங்க இருந்தாங்கே பூக்கின்றாள்!
திங்கள்
ஒளிநலமும் தென்றல் உணர்த்தும் நலமும்
களிக்கின்றாள்... ஓவியங் காண்!

நீல நெடுவானம் எங்கும் கொடிநிரைகள்!
கோலமொழி மகளின் கொண்டாட்டம்!
காலமுனி!
ஆங்கு விழாக் காணும் ஐயன் இதழ்முறுவல்
தாங்கும் அழகோ தனி!

மரகதம்சேர் வண்ண முடிசுமந்து மக்கள்
திரளிடையே வாழ்கின்றாள் தேவி!
கரமிசை
செங்கோல் சுமந்து சிரிக்கின்றாள்... ஞாலத்தே
பொங்கும் மகிழ்ச்சிப் புனல்!

பவள இதழ்கள் பளபளக்கும்....! ஆசை
தவழ ஒரு முறுவல் தாவும்!
இவளேன்
விழியாலே என்னை வெறிக்கப் பார்க் கின்றாள்?
அழியாத காதல் அழகு!

கோமே தகத்தின் குளிர்ந்த ஒளிகொண்டாள்!
நாமீதி லாடும்எழில் நங்கை!
பூமூடும்
தேனாகி நிற்கின்ற தேவி அருந்தமிழே
நானாகி நிற்கின்றேன் நான்!

வைர நெடும்போர் ஆடி உடல்வளைந்து
மையின் தலைநரைத்த மானிடன்
செய்ய தமிழ்ப்
பாவலன் பெற்ற பசுங்காதல் ஓவியமே!
தேமொழியே வாழ்க திகழ்ந்து!

பெருமூச்சு

வலிபடைத்து முறமெடுத்துப்
புலியடித்த தமிழகம்
கிலிபிடித்த நிலைபடைத்து
வெலவெலத்து வாழ்வதோ?

பகையொ துங்கப் பறைமுழங்கிப்
புகழடைந்த தமிழகம்
கதிகலங்கி விழி பிதுங்கி
நடுநடுங்கி வாழ்வதோ?

படைநடத்தி மலைமுகத்தில்
கொடிபொறித்த தமிழகம்
துடிதுடித்து அடிபிடித்து
குடிகெடுத்து வாழ்வதோ?

கடல் கடந்த நிலமடைந்து
கதையளந்த தமிழகம்
உடல் வளைந்து நிலைதளர்ந்து
ஒளியிழந்து வாழ்வதோ?

மகனிறக்க முலையறுக்க
முடிவெடுத்த தமிழகம்
புகழிறக்க மொழியிறக்க
வெளிநகைக்க வாழ்வதோ?

வெற்றி விழா

முரசுகள் அதிர்ந்தன கேண்மினோ! கேண்மின்!
முழங்கின ஊதுகுழல்!
புரவிகள் ஆடின காண்மினோ! காண்மின்!
பொழிந்தன தமிழ்ப்பாடல்!
நிரை நிரை காவடி நிறைந்தன கண்டீர்!
நிகழ்ந்தன நடனங்கள்!
அரசொடு தமிழகம் மலர்ந்தது கண்டார்!
அனைவரும் மகிழ்கின்றார்!

தூயவெண் சங்குகள் கூவின! கூவின!
தோன்றின கவிதைகள்!
ஆயிரம் வகை வகை வீணைகள் ஆர்த்தன!
அதிர்ந்தன வேட்டுக்கள்!
தாயகம் தனியரசானது! தேனிசை
தவழ்ந்தது காற்றெல்லாம்!
சேயிழை தமிழ்மகள் வாய்மலர் இதழ்களும்
சிரித்தன சிரித்தனவே!

நீள்நெடு மாளிகை வீடுகள் நிறைந்தன!
குடிசைகள் நீங்கினவே!
நாள்தொறும் வாடிய ஏழையர் பூமுகம்
நகைத்தன! நகைத்தனவே!
ஆள்பவர் அடிமையர் உள்ளவர் அற்றவர்
ஆகிய பேதங்கள்
தூள்பட விடுதலை வந்தது! விண்மிசை
பறவைகள் துள்ளுதடா!

பனிமலர் புகைப்பொருள் சந்தனம் மணந்தன!
பாவையர் எழில் காட்டும்
கனிவகை பாலொடு சர்க்கரை கரும்புகள்
இனித்தன வாயெல்லாம்!
தனியெழில் கொண்டது தமிழகம்! பந்தல்கள்
தாங்கின வீதிகளை
மனிதரின் திரள்நிறைக் கின்றதால் ஊர்மிசை
வீதிகள் மறைந்தன காண்!

கோயில்க ளெங்கணும் மணியொலி கொஞ்சின!
தமிழ்மனம் குளிர்ந்ததடா!
போயின ஊர்வலம்! வீடெலாம் பொன்விழா!
பூத்தன நிறைகுடங்கள்!
ஆயிரம் எழில்வகை! விடுதலை நாளெனில்
அழகொரு காட்சியன்றோ?
வாயிதழ் எங்கணும் வாழ்த்தொலி நின்றது!
வாழிய தமிழ் நாடே!

விடுதலைப் பொன்னாள்

காலங்கனிந்திடும் அழகுதானோ?
படைத்தவன் அருளோ? தமிழ்க்கன்னி
ஞாலம் மகிழ்ந்திட அரசுகொண்டு
வாழும் நாள் அடடா... மலர்ந்தாச்சோ?
கோலம் இதுபெருங் கோலமென்பேன்!
கொடுமைகள் பொடியாயின கண்டீர்!
நீல வான்மிசை தமிழ்நாட்டினர்தம்
கொடிகளும் எழுந்து நிறைந்தனவே!

கூனல் விதிக்கிழவியுடல் தேய்ந்தாள்
நிலைகாணீர்... குடுகுடென ஓடிப்
போன நரிபோலவே போகின்றாள்....
தமிழ் மண்ணின் மனைகள் தெருப்புறங்கள்
ஆன திசைக ளெங்கணுங் கொண்டாட்டம்!
ஒளிப் பந்தல்! அழகின் சிரிப்பம்மா!
மான விடுதலை மலர்ந்த கோலம்
உளங்கண்டு மகிழும் திருநாளோ?

முத்து வளைவுகள்! மணிகள்! பச்சை
மாவிலைப் பந்தல்! முகங்குனியும்
பத்தினிபோல் குலைசரித்த வாழை
தெருப்புறத்தே! கோலம் தரையெல்லாம்!
குத்து விளக்குகள்! மலர்கள்! காற்றில்
எழுந்தாடும் வண்ணக் கொடிக் கூட்டம்!
பத்துத் திசைகளும் அழகுக்காட்சி!
கவிஞன்கண் பார்த்துக் களிப்பதற்கே!

நீள நெடுநாள் அலைந்து களத்தே
போராடி நின்ற தமிழ்மறவர்
ஆள ஒரு நாள் கிடைத்த தென்றே
அணி சேர்ந்து பாடி அகமகிழ்வார்!
பாளையென எழில் முறுவல் விரிப்பர்
இளம் பெண்கள்! அவர் வாய்ப்பனிமுத்தம்
வேளைதொறும் அருந்தி விடுதலை நாள்
களிக்கின்றார் கொழுநர்! விழாவன்றோ?

சாவும் ஒரு வாழ்வே!

ஏடா! தமிழ் வீரா! உனை
எலிபோல் நினைத்தாரா?
வாடா படை யூடே அற
வலியின் துணை யோடே!
நாடா பிணக் காடா என
நால்வர் மடிந்தாலும்
போடா அவர் வழியே! நகை
புரிவாள் தமிழ் மொழியே!

குண்டாந்தடி கொண்டே அடி
தந்தார் வெறியாளர்
என்றால் அது நன்றே! உமை
ஈன்றாள் புகழுண்டே!
பண்டை மொழி என்பார் தமிழ்
பார்ப்போம் அதை வீணர்
வென்றா விடுவார்கள்? மற
வேங்கை விடுவானோ?

"முத்தே! முழு நிலவே! விடை
மொழிவாய்!" என இல்லாள்
பத்தே விரல் பற்றி அவள்
பதிலின் வெறி பெற்று...
"சொத்தே! மொழி வித்தே! தமிழ்ச்
சொல்லே! உனக்காகச்
செத்தே மடிகின்றேன்!" எனச்
செல்வாய் தமிழ் ஏறே!

தமிழச்சி!

இலங்கை மலைதனிலே... தமிழச்சி!
என்ன துயரெலாம் காணுகின்றாயடி!
முழங்கை வலித்திடவே தேயிலை
முளைகள் பறித்து முகம் சிவப்பாயம்மா!
விலங்கும் உறங்கிநிற்கும் சாமத்தில்
விழித்து நெடுமலை ஏறி இறங்குவாய்!
பழங்கள் பழுத்திடாதோ உன் காலில்?
பச்சைக் குருதிநீர் பாயாதோ கண்மணி?

காலைப் பனிநனைவாய்! என்னம்மா...
காய்ந்து நடுவெயில் தனிலே கருகுவாய்;
பாலை நினைந்தழுவான் உன் பிள்ளை...
பாவி வெறும் முலை நினைந்தழுவாயடி!
ஏழை அடிமையடி தமிழச்சி!
இங்கோர் தமிழுடல் ஏனெடுத்தாயம்மா?
ஊழை நினைந்தழவோ? தமிழனின்
உரிமை இலாநிலை எண்ணி அழவோடி?

காட்டு மலைதனிலே... தமிழச்சி!
காலம் முழுவதும் நீ உழைத்தென்னடி?
ஓட்டைக் குடிசையொன்றும் வாழ்விலே
ஓயா வறுமையும் நோயும் இவையன்றி
தேட்டம் எதுபடைத்தாய்? அடி ஒரு
செம்புப் பணமேனும் தேறியதுண்டோடி?
நாட்டின் முதுகெலும்பே தமிழச்சி!
நானிலம் வாழநீ மாள்வதோ அம்மா?

அறப்போர்

எட்டுத் திசைகளும் பட்டுத் தெறித்தன
ஈனர் குண்டுகளே! - குண்டு
பட்டுத் தமதுடல் கெட்டுச் சிதறிடப்
பாய்ந்தார் தொண்டர்களே!

மானம் பெரிதென ஊன உடல்விழ
மாண்டார் தமிழ் வீரர்! - ஆவி
தானம் எனத்தந்த மானத் தமிழன் தோள்
தங்கம்! தங்கமடா!

பெண்களை மென்மைப் பிறவிகளென்று
பேச மனம் வருமோ? - அங்கே
மண்ணி லுயிர்சிந்தும் இளைஞர்க்கு வாய்த்த
மகளிர் குலமல்லவோ?

பள்ளிச் சிறார்களும் நல்லறப் போரிலே
பாய்ந்து களிக்கின்றார்! - செந்நீர்
வெள்ளத்திலாடி மரணத்தின் முத்தம்
விரும்பித் துடிக்கின்றார்!

ஓவென்றிரைந்து நடக்குதடா எங்கும்
உரிமைப் போராட்டம்! - வாழ்வு
தாவென்று கேட்டு மடியுதடா எங்கள்
தமிழர் படைக்கூட்டம்!

தன்னை வருத்தியும் தன்னுயிர் தந்தும்
தமிழன் மடிகின்றான்! - தங்கள்
பொன்னுயிர் சிந்தும் புறாக்களைக் கண்டு
புலவன் மலர்கின்றான்!

எங்கும் பிணத்திரள்! எங்கும் பிணநெடி!
இனிய அறமங்கை - கண்ணில்
பொங்கி வழியும் புனலின் நெருப்பிலே
பூமி அழியாதே?

ஈழம் தமிழ்மண் இரண்டிலுஞ் செந்நீர்
எழுந்து பெருக்கெடுத்து - நின்ற
ஆழியுஞ் செங்கடலானது கண்டார்!
அதிர்ந்தார் புவிமாந்தர்!

போர்

தெய்வ மாவீரர் தமிழ் வீரர்
திரண்டு களத்தின் கண்ணே

செய்யும் அறப்போரை என்னென்று
தமிழில் செப்புவேனோ?

பெய்யும் மழைத் துளிகளென்னப்
பெருகிக் கொட்டும் மாற்றார்

கையின் குண்டுகளிடையிலே
தமிழர் களித்தாரம்மா!

குண்டின் அடிபட்டார் சில தோழர்
கூட்டஞ் சிறையாடிற்று!

தொண்டர் பலரங்கே தடியாலும்
தூள் தூளானார்! தமிழன்

மண்டையுடைந்ததே கதையெங்கும்!
எனினும் மாற்றார் தானை

கண்டக ‘ட்சியோ சிறிதேனும்
கலங்காத் தமிழர் படையே!

கொள்கை உயிரென நினைக்கின்ற
கூட்டம் உரிமைக் கோயில்

உள்ளே விடுதலை இறையோனை
அடைய ஓடுங் கூட்டம்

வெள்ளை நெஞ்சமும் அறநோக்கும்
அன்பும் கருவிகளாக்கித்

துள்ளுமொரு கூட்டம் பகைவர்க்கு
நடுங்கித் தூங்குமோடா?

நெடும் போர்

கொட்டு செங் குருதிக் களத்தினி லாங்கே
கொதித்தெழும் மறவர்தம்மிடையே
கட்டுடல் வீரன் ஒரு தமிழ் நெஞ்சன்
கடலென அதிர்ந்தொலி செய்வான்

தமிழர் பொன்னாட்டைத் தாயக மண்ணைத்
தரமறுக் கின்றவ னெவனோ...?
இமை நொடிப் போதி லெழுந்திரு தமிழா?
இன்னுயிர் நமக்கொரு பொருளோ?

ஓடுக தானை! ஓடுக பகைவர்
உலவிடும் திசைவழி யெல்லாம்
தேடுக தமிழர் தேசத்தின் மானம்...
தெய்வத்தில் ஆணையிட் டெழடா!

பைந்தமிழ் மொழியை எவன் பழித்தாலும்
பழித்தவன் தலை கொண்டு வாடா?
ஐந்து துண்டாக்கி அடுப்பினில் வைப்போம்!
அது நமக் குணவாகும் போடா!

கருவினில் அன்னை வளர்த்ததும் இந்தக்
கைகளைத் தந்ததும் எல்லாம்
செருவினில் வெற்றிக் கொடியுடன் நின்று
சிரிப்பதற் கன்றோடா தமிழா!

ஆழிபோல் ஆழி அலைபோல் முழங்கி
ஆடடா.... போர்க்களமாடு!
நாழிகை யொன்றில் நாடாள வேண்டும்
நாமென்று சிங்கம் போலார்த்தான்!

சங்கொன்று களத்தில் முழங்கிற்று! வீரர்
தானையும் முழங்கிற்று கண்டீர்!
பொங்குபோர்க் களத்தில் மாற்றாரும் போந்தார்!
போரென்று கொட்டிற்று முரசம்!

அதிர்ந்தன திசைகள்! அசைந்தன மலைகள்!
அழிந்தன காடுக ளெல்லாம்!
உதிர்ந்தன கரங்கள்! உடைந்தன தலைகள்!
உயர்ந்தன பிணமலைக் குவியல்!

வீரம்

அழிவுற எழுதமிழ்
மாந்தர் களத்தினிலே

சுறவுகள் கடல் மிசை
வெறியொடு சுழல்வன
போலும் சுழல்கின்றார்...

நறநற வென எயி
றொலிசெய மறவர்கள்
ஆட்டம் நடக்குதடா!

புறமெனு மழகிய
தமிழ்க்குல வீரரின்
வாழ்க்கை வீண்போமோ?

மாமலை யொத்தன
தமிழரின் ஓங்கிய
தோள்கள்! சினங்கொண்டு

தாமரை யொத்தன
செந்நிற அழகொடு
விழிகள்! ஓவென்னும்

தீமலை நெருப்பினை
யொத்தன சுழன்றன
வீரர் மூச்சுக்கள்!

தேமதுரத் தமிழ்
உயிரெனக் கொண்டவர்
திரண்டார்! போர் செய்தார்!

தடியடி தலைமிசை
படவிழும் அரவென
வீழ்ந்தார் பகை வீரர்!

இடிபட வேரொடு
விழுமரம் என உடல்
சாய்ந்தார் சிலரங்கே!

அடிபுய லிடைநிலை
கெடுமொரு புவியென
ஆனார்... அம்மம்மா

பொடிபடு தசையுடல்
சுமந்தவர் அழிவுறு
போரை என்னென்பேன்?

தாவிடு வேங்கைகள்
குகையிடை ஒளிந்தன
போலுந் தமிழ்வீரர்

காவிய மார்பிடை
ஒளிந்தன குண்டுகள்!
களத்தே செவ்வானின்

ஓவியம் வரைந்தது
தமிழரின் குங்குமக்
குருதி நீரோட்டம்!

சாவிலும் விடுதலை
பெறுவது மெய்யென
வீழ்ந்தார் தமிழ்நெஞ்சர்!

பறவையின் நிரையென
வானிடை யெழுந்தன
பகைவர் ஊர்திகளே!

சிறகுகள் துகள்பட
அவைமிசை பறந்தன
தமிழர் கருவிகளே!

திறலுடை தமிழரின்
பொறிபல கணைகளை
அள்ளிச் சிதறினவே!

விறகுகள் எனமதில்
வீடுக ளெரிந்தன!
ஊர்கள் வீழ்ந்தனவே!

ஆவியில் இனியது
தமிழென உணர்ந்தவர்
அழகின் வடிவுடையார்...

தேவியர் மான்குலத்
திரளென அமர்க்களம்
ஆடிச் சிவக்கின்றார்!

தாவிடு வேல்விழி
தமிழ்வழி கொண்டவர்
கற்பின் தழல்முன்னே

சாவிடை கொழுநரை
அனுப்பிய பகைவரின்
தானை எரியாதோ?

கொடும்பொறிக் குண்டுகள்
வெடித்தெழ வானகம்
கூந்தல் விரித்தாற்போல்

நெடும்புகை எழுந்தது!
பகைவரின் கொடிகளும்
நெருப்பி லாடினவே!

கடும்புயல் அடித்ததை
நிகர்த்தது களத்திலே
தமிழர் போராட்டம்!

திடும் திடுமென ஒலி
செய்தது பகைவரின்
ஓட்டம் செவியெல்லாம்!

ஆடின கழுகுகள்...
வான்மிசை! அழுகின
பிணத்தின் இரைதேடி

ஓடின நரிகளும்
தெருப்புற நாய்களும்!
ஊரே காடாகி

மூடின பிணங்களின்
விழிகளைக் கரடிகள்
மோந்து களந்தோறும்

தேடின! பூமியின்
திசைகளும் நாறின!
புழுக்கள் திரண்டனவே!

விடியும் வரை

அதிகம்

தேடல்