Showing posts with label காசி ஆனந்தன் கவிதைகள். Show all posts
Showing posts with label காசி ஆனந்தன் கவிதைகள். Show all posts

நறுக்குகள் - இலக்கியம்

களத்தில்
நிற்கிறேன்...

என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.

தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?

வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்.

நறுக்குகள் - மனிதன்

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

"பசு பால் தரும்"
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்

"காகம்
வடையைத் திருடிற்று"
என்கிறான்.

இப்படியாக
மனிதன்...

நறுக்குகள் - குப்பைத் தொட்டி

அலுவலகத்தில்
இருக்கிறவனுக்கு
இது -
குப்பைத் தொட்டி

குப்பை பொறுக்கி
வாழ்கிறவனுக்கு
இது -
அலுவலகம்.

நறுக்குகள் - மானம்

கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு.

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே.

அம்மணமாகவே
போராடு.

நறுக்குகள் - ஏழ்மை

சதை பிடித்து
விடுகிறாள்

அழகு
நிலையத்தில்

எலும்புக் கைகளால்.

நறுக்குகள் - அறுவடை

சுவரொட்டியை

தின்ற கழுதை
கொழுத்தது.

பார்த்த கழுதை
புழுத்தது.

நறுக்குகள் - மாடு

ஆயிரம்
ஆண்டுகள்

வண்டி
இழுக்கிறது...

கொம்பை
மறந்த
மாடு.

நறுக்குகள் - புரட்சி

மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்.

குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்.

கலங்கரை

முந்தி முளைத்த கலங்கரை
தமிழ்ப் பரம்பரை - நடுச்
சந்தியில் வீழ்ந்து துடிப்பதேன்?
தாழ்ந்து கிடப்பதேன்?

அள்ளிக் கொடுத்தகை கேட்குதே!
ஓடு தூக்குதே! - இலை
கிள்ளிப் பொறுக்கித் திரியுதே!
உள்ளம் எரியுதே!

மாற்றார் தலைதனில் ஏற்றினாய்
கல்லை! வாட்டினாய்! - இன்று
மூட்டை சுமந்து நடக்கிறாய்!
தாழ்ந்து கிடக்கிறாய்!

ஆதியில் மாடம் அமைத்தவர்
வாழ்வு சமைத்தவர் - அட
வீதியில் காலம் கழிப்பதோ?
நால்வர் பழிப்பதோ?

"முல்லைக்குத் தேரை வழங்கினோம்"
என்று முழங்கினோம்! - இங்கே
பிள்ளைக்குப் பாலில்லை பாரடா!
தருவார் யாரடா?

கடலே!

ஈழம் தமிழகம் எனுமிரு நாட்டிடை
ஓலம் இடுமோர் உப்புக் கடலே!
இந்நாள் இடிநிகர் அலைக்குரல் எழுப்பி
என்னதான் நீ இரைந்து நின்றாலும்
கோடிக் கரங்கள் ஒரு நாள் உன்னை
மூடித் தமிழ்மண் போடுவதுண்மை!
அந்நாள் உனது சாநாள் ஆகும்!
நாங்களெல்லாம் கரத்தே பறைகள்
தாங்கி நின்று தாளம் கொட்டுவோம்!
உள்ளத் தோணியில் ஊர்ந்த தலைவனைக்
கள்ளத் தோணி ஆக்கிக் கனிமகள்
ஈழநாட்டில் எலும்பாய் உருக
காளையைத் தமிழ்நாட்டுக் கனுப்பினாய்!
அலறும் தாயைத் தமிழகத் தமர்த்திக்
குழறும் சேயைக் கொழும்பில் விட்டாய்!
அண்ணன் ஒருவன் தொண்டியில் புலம்பத்
தம்பி ஒருவனைக் கண்டியில் வைத்தாய்!
கடலே! உன்னை இனியும் தமிழர்
விடுவார் என்று கருதுதல் வேண்டா!
நின்றன் சாநாள் நெருங்கி விட்டது!
வெறி அலைக் கரங்கள் வீசும் உன்னைச்
சிறைசெய் தடக்கி நின்னுயிர் சிதைத்து
மண்ணிடும் நாள்வரை ஓயோம்...
அந்நாள் தமிழர் ஆளுநாள் கடலே!

காதலியே!

காதலியே! உள்ளமெனும் காயத்தோடும்
கனத்துவரும் மூச்சோடும் கண்ணீரோடும்
வாதையுறவோ இவனைக் காதலித்தாய்?
சாதலுறவோ இவனைக் காதலித்தாய்?

புல்லைப்போல் மெலிந்த உனைக் காதல் நோயால்
புண்ணாக்கி மென்மேலும் மெலியவைக்கும்
கல்நெஞ்சக் காரனை ஏன் காதலித்தாய்?
களம்நின்ற வீரனை ஏன் காதலித்தாய்?

சுகங்காட்டும் காதலர் தோள்கள்மீது
துயில்கொள்ளும் எழில்மாதர் வாழும் மண்ணில்
முகங்கூடக் காட்டாது களத்தே வாழும்
முண்டத்தை ஏனம்மா காதலித்தாய்?

பொறு கண்ணே! போர்வாழ்வு நெடுநாள் இல்லை!
பூக்கட்டும் தமிழாட்சி! மறுநாள் உன்றன்
சிறுகாலில் விழஓடி வருவேன் அத்தான்!
தித்திக்கும் முத்தம்உன் செவ்வாய்கேதான்!

தாயே!

அன்னையே! என்றன் தாயே!
அம்மாநீ அடுத்தாரைப் போல்

தின்னவும் காலை நக்கித்
திரியவும் படைத்திடாமல்

என்னையேன் தமிழை எண்ணி
ஏங்கிடப் படைத்தாய்? இங்கே

உன்னரும் பிள்ளை நாளும்
உயிர்துடிக் கின்றேன் தாயே!

கும்பிட்டால் பல்லைக் காட்டிக்
குழைந்தால் நான் குனிந்துபோனால்

நம்பிக்கையோடு மாற்றான் கால்
நக்குவேன் என நாணாது

தம்பட்டம் அடித்தால் நாளை
தாங்கலாம் பதவி கோடி!

வெம்பிப்போய் உலர்கின்றேன் யான்....
வீரமேன் கொடுத்தாய் தேவி?

பாரம்மா.....முன்னாள் என்னைப்
படுக்கையில் அருகே வைத்து

சேரனார் கதைநீ செப்பிச்
சிறியேனைக் கெடுத்ததாலே

பாரம்மா....மாற்றானுக்குப்
பணியான் உன் பிள்ளை....வீதி

ஓரமாய்க் கிடந்தும் காய்ந்தும்
உரிமைப்போர் நிகழ்த்துகின்றான்!

மானத்தின் வடிவே! என்னை
மகவாக ஈன்ற தாயே!

தேனொத்த முலைப்பா லோடும்
தீரத்தை அளித்த தேவி!

ஈனத்தை ஏற்கா நெஞ்சம்
எனக்களித்தவளே! அன்னாய்!

ஊனத்தின் உடல் வீழ்ந்தாலும்
உரிமைப்போர் நிறத்தே னம்மா!

செருக்களம் வா!

மூச்சை எடுத்தெறி தமிழா!
முழுங்கு மேகமாகிக் கிளம்பு

சிச்சி அடிமையாய் வாழ்ந்தோம்.....
செந்தமிழ்த்தாய் இதற்கொடா பெற்றாள்?

கூனி வளையவோ மேனி?
கும்பிட்டுக் கால் பிடிக்கவோ கைகள்?

தீனி மகிழவோ வாழ்க்கை?
செந்நீர் ஆடி முழக்கடா சங்கம்!

நாங்கள் கவரிமான் சாதி
நாய்போல் எசமான் அடிகளை நக்கோம்!

தீங்கு படைப்பவன் எங்கே?
தேடி உதைப்போம்! செருக்களம் வாடா!

ஓங்கி முழுங்குக தானை!
உடைந்து நொறுங்கி விலங்கு சிதறுக!

தூங்கி வழிந்தது போதும்!
துள்ளி எழுக தமிழ்த்திருநாடே!

போர் முரசு!

வளைக் குரலில் முழுங்கினால் இங்குள்ள
தாழ்வு மறைந்திடுமோ? - நாலு

கவிதை எழுதிக் கிழித்துவிட்டால் எங்கள்
கவலை குறைந்திடுமோ? - வீட்டுச்

சுவருக்குள் ஆயிரம் திட்டங்கள் தீட்டிச்
சுதந்திரம் வாங்கிடவோ? - தலை

குவியக் கிடந்த செருக்களம் ஆடிக்
குதிக்கப் புறப்படடா!

உச்சியில் நின்று விழுந்துவிட்டோம் அட
உணர்ச்சி இழந்துவிட்டோம்! - உயிர்

அச்சத்தினால் இங்கு சாய்ந்துவிட்டோம்! - வீட்டில்
அடங்கி இருந்துவிட்டோம்! - தெருப்

பிச்சை எடுத்து வளர்ந்துவிட்டோம் - புகழ்
பேண மறந்துவிட்டோம்! - இந்த

எச்சில் நிலை இனி இல்லை எனக்கொடி
ஏற்றிப் புறப்படடா!

நாற்றிசை மண்ணும் கடலும் மலைகளும்
நடுங்க வலம் வருவோம்! - பெரும்

ஆற்றல் மிகுந்தவள் அன்னை அவள்மிசை
ஆணை எடுத்திடுவோம்! - இங்கு

வேற்று நிலத்தவர் ஆட்சியெனில் அந்த
விலங்கை உடைத்தெறிவோம்! - அட

சோற்றுக்கு வாழ்ந்து சுருண்டது போதும்!
சுழன்று புறப்படடா!

உலகம் அனைத்தையும் வென்ற குலத்தினை
ஊழ்வினை வெல்லுவதோ? - எங்கள்

மலைகள் எனுமிரு தோள்களையும் விதி
மங்கை மறந்தனளோ? - அவள்

கலகம் நடத்தித் தமிழர் குலத்தைக்
கவிழ்க்க முடியுமோடா? - அன்னை

முலையில் பருகிய மூச்சுடனே பறை
முழுக்கிப் புறப்படடா!

வான் முகிலே!

இடிக்கின்றாய்.... வான்முகிலே!
ஏன் இடித்தாய்? இங்குள்ள
தமிழர் நெஞ்சில்
வெடிக்கின்ற விடுதலையின்
பேரார்வம் வெளிக்காட்ட
விரும்பினாயா?

கருப்பாக வருகின்றாய்..
வான்முகிலே! ஏன் கருத்தாய்?
களத்தில் பாய
விருப்போடு நாள்பார்க்கும்
தமிழ்வீரர் வெறித் தோற்றம்
விளக்கினாயா?

சிரிக்கின்றாய்...மின்னல் வாய்
வான்முகிலே! ஏன் சிரித்தாய்?
சினந்து மண்ணை
எரிக்கின்ற தமிழ்ப்புலவன்
கவிதையினை வானேட்டில்
எழுதினாயா?

ஓடிப்போ...!ஓடிப்போ...!
புதுக் கவிதை

வான்முகிலே....ஓவென்று
முழக்கமிட்டுப்

பாடிப்போ! அதிரட்டும்
மண்மேடு! காணட்டும்
பகைவர் என்போர்!

புகழ்பாடு

களமெனில் முழங்கிவரும் ஏறு! - தமிழன்
கங்கு கரை பொங்கிவரும் ஆறு!
உளபகைவர் இலைஎனவே
உடல் எரிந்து நீறுபட
பளபளக்கும் வெந்தழலின் கூறு! - தமிழன்
படைவலியும் தோள்வலியும் நூறு!

மானமே தமிழனுயிர் அங்கம்! - தமிழன்
மனம் இனிய தமிழ்குலவு சங்கம்!
தேனெனும் தமிழ் அழியும்
சேதிவரும் போதினிலே
வானளவு பாயுமறச் சிங்கம்! - தமிழன்
மாசுபடாத் தூயமணித் தங்கம்

தமிழன் உடற்குருதி சூடு! - தமிழன்
தனை எதிர்ப்போன் பாடுபெரும் பாடு!
இமயம் கடாரமெனும்
இடம் பலவென்றவனலவோ
தமிழனுக்கு யாவனுளன் ஈடு? - தமிழன்
தாங்கு புகழைத் தமிழா! பாடு!

நிலாவே!

நிலாவே! நீயேன் தமிழர் நிலமிசை
உலா வருகின்றாய்? ஓடிப் போய்விடு!

அடிமைச் சிறையின் இடையே அழுந்தி
துடியாய்த் தமிழன் துடித்து நலியும்

கண்ணீர் ஆற்றுக் காவிரி மண்ணில்
வெண்ணிலா உனக்கு விழல்உலா வேறா?

போ! போ! நிலாவே! போய்எங் கேனும்
வாழ்வுடை யோர்முன் வலம்வா! இங்கே...

ஒடிந்த தமிழன் உலர்ந்த தமிழன்
மடிந்து மடிந்து வாழும் தமிழன்

கண்ணில் நெருப்பு வார்க்காதே
மண்ணில் எங்கேனும் மறைந்துபோ நிலாவே!

தோழி

நானோர் கனாக்கண்டேன் தோழி! - தமிழ்
நாட்டின் விடுதலை கேட்கப் பிறந்தவர்
தானை நடத்தினார் தோழி! - அங்கு
சட்டம் உடைந்தது! பகைவர் தலைகள்
வானில் பறந்தன தோழி! - இந்த
வையம் குருதியில் தோய்ந்து கிடந்தது!
மானத்தின் வேகமோ தோழி! - தமிழ்
மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன்!

ஈழத்தில் சிங்களம் என்றார்! - தமிழ்
இல்லத்தில் இந்திதான் என்றும் குலைத்தார்!
வேழத்தை வென்றவர் நாட்டில் - இந்த
வீணர்கள் ஏன் வந்து மோதினார் தோழி?
கூழுக்கு வழியற்றுப் போனோம் - என்றால்
குலவீரம் கூடவா இல்லாமல் போனோம்
பாழுக்கு வந்தார்கள் தோழி - வந்த
பகைவரை வணங்காத தமிழ்நாடு வாழி!

வீண் சண்டை போட்டதும் இல்லை! - தமிழன்
வீணாக வந்ததை விட்டதும் இல்லை!
தூணொன்று சாய்ந்தாலும் சாயும் - தமிழர்
தோள்வீரம் இதுவரை சாய்ந்ததே இல்லை!
ஆணென்று வாழ்ந்தவரெல்லாம் - இங்கே
ஆமைபோல் அடிமைபோல் உயிர் வாழ்ந்ததில்லை!
பூணாத போர்க்கோலம் பூண்டார்! - பகைவர்
புலியோடு மோதினார் என்செய்வோம் தோழி?

காதலர் வரவில்லை தோழி! - அவர்
களத்திலே இருக்கட்டும்! இங்கென்ன வேலை?
மோதட்டும் பகைவர்கள் முன்னால் - தோழி
முத்தமும் சத்தமும் வெற்றிக்குப் பின்னால்!
மாதர்கள் வீரமே பெரிதாம்! - அவர்
மாண்டாலும் போரிலே மாளட்டும் என்பேன்!
ஆதலால் இசைபாடு தோழி - தமிழ்
அன்னையின் புகழ்பாடு! வாழட்டும் நாடு!

தழலிடு!

காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக்
கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி
சாகும்வரை அடி பின்பு கொளுத்து!

அன்னைத் தமிழை மறந்தான்! - பாவி
அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்!
என்ன கொடுமை இழைத்தான்! - தீயன்
எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்!

மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! - வீட்டில்
மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்!
சோற்றுப் பதவிகள் ஏற்றான்! - மானம்
தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்!

பல்லாயிரம் நாட் பயிரை - வீரம்
பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை
எல்லாம் நிறைந்த தமிழை - தழலில்
இட்டவன் உடல்மேல் இடடா தழலை!

தீயன் உடல்தீயத் தீவை! - எங்கள்
தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை!
பாயும் புலியே! தமிழா! - தம்பி!
பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா!


முரசொலி

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
செந்தமிழ் நாட்டின் தீராப் பிணிகள்
போம் போம் போமென முழங்கு முரசே!
புன்மைகள் தீரப் பொங்கி முழங்கு!

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
செவ்விழி உடையோம் செருமாண் தமிழர்
யாம் யாம் யாமென முழங்கு முரசே!
யானைகள் புலிகள் ஆனோம் முழங்கு!

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
சிறைமதில் சாய்ந்து சிதறிப் போமா?
ஆம் ஆம் ஆமென முழங்கு முரசே!
அரசொடு தமிழன் ஆளமுழங்கு!

தீம் தீம் தீமென முழங்கு முரசே!
தீயவெம் பகைவர் ஓடமுழங்கு!
தீம் தீம் தீமென முழங்கு முரசே!
தேச விடுதலை பாட முழங்கு!

விடியும் வரை

அதிகம்

Labels

தேடல்