ஈழ வேந்தனுக்கு எம் இதய அஞ்சலி- வீர வணக்கம !

 


(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவினை தழுவிய செய்தியறிந்து அந்நிமிடமே நான் தீட்டிய கண்ணீர் கவிதை- இன்றும் எம் மக்களின் மாறா அதே நிலை………!.)


* என் இனிய தோழா..!

நீ
புதைக்கப்பட வில்லை
விதைக்கப்பட்டிருக்கிறாய்..!

* விடுதலை வேட்கையில்
உன்
எரிதழல் ஏந்தி
வீறு கொண்டெழும் தமிழினம்..!

* உன் ஆத்மா சாந்தியடைய
உலகத் தமிழர்களின் சார்பில்
என்
கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன்..!

* உன் ஒருவனின் உயிர் மூச்சில்
ஓராயிரம் தமிழ்ச்செல்வன்களை
எம்
வீர தமிழச்சிகள்
ஈன்றெடுப்பார்கள்
ஈழப் பிறப்பிற்காக..!

* கயவர்களின் கழுகுப் பார்வையில்
நீ
எப்படி சிக்குண்டாய்?
எம் ஈழவேந்தனே.!

* தொலைக்காட்சி செவ்வியிலே
உன்
புன்னைகை முகத்தில்
தமிழீழம் கண்டோமடா
தமிழ்ச்செல்வனே..!

* உன் அரசியல் பார்வையினை
உலகமே வியந்ததடா..!
அனுபவ முதிர்ச்சியில்
ஆதிக்க சக்திகள் நடுங்கியதடா..!
அன்புத் தோழனே.!

* தோல்விகள் எமக்கு புதிதல்ல..
உன்
வீர மரணம் புதிய வரலாறு
படைக்க போகிறது..!

* புரியவில்லை கயவர்களுக்கு
காட்டுமிராண்டிகளின்
கூடாரம் சிதைந்து போகும்
காலம்
வெகு தூரமில்லை..! தோழா..!

* கால் நூற்றாண்டு விடுதலைப் போரில்
உன்
காலடித் தடங்கள்
வீரத் தழும்புகளாய்
எம் இதயவரைக்குள்..!

* மறக்க முடியாத
நினைவலைகள்- எம்
உறக்க நிலையில் கூட
உன்
அழகிய புன்னகை
தலாட்டுகிறது தமிழ்செல்வனே..!

* செஞ்சோலைக் குருதியில் நனைந்த
பிஞ்சு உள்ளங்களின்
ஆறாத் துயரம்- மீள்வதற்குள்
மீண்டும் உன் இழப்பு- எமக்கு
தாங்க முடியவில்லையடா..!

* உடல் பிரிந்தாலும்
உன்
உயிரும் உணர்வும்
ஈழ மைந்தர்களின் இதயத்தில்
உறங்காத ஓசையாய்…!

* ஈழ மலர்ச்சியின்
எழுச்சிப் போருக்கு
நீ- கொடுத்த
உயிர்த் தியாகத்திற்கு
ஈடு இணையேதுமில்லை தோழா..!

* நீ- சிந்திய ஒவ்வொரு
குருதித் துளியிலும் துளிர்த்தெழும்
எழுச்சி விருட்சங்களுக்கு- எமது
வீர வணக்கங்கள்.
ஆற்றாமையோடும்….,மீளாத்துயரோடும்….,குவைத்திலிருந்து தமிழவன்.

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்