தீருமா யுத்தம்

 

வானத்தில் நட்சத்திரங்களை எண்ணிய − நாம்
இன்று யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு
உயிர் மடிந்த பச்சிளம் குழந்தைகளினது
உடல்களை எண்ணுகையில் ஆயிரம் மலைகளை
மனதில் சுமப்பதாய் தாங்க முடியா பாரம்....

நேற்று வெண்ணிலாவைக் காட்டி சோறு ஊட்டிய
பையனை இன்று உயிரற்ற உடலைப் பார்த்து
துடி துடித்து கதறும் தாயின் துக்கத்தில் பங்கு
கொள்ளும் பொருட்டு இயற்கையும் மழையாய்
மாறி கண்ணீர் மழை பொழிந்தாள்....

பச்சைப் பசேலென்று கண்ணுக் கெட்டிய தூரம்
வரை தன் பசுமையால் கண்ணைக் கட்டிப்
போட்டு அழகு ராஜ்ஜியம் செய்து வந்த
மரங்கள் இன்று பறவை போல் இறக்கை
விரித்து வந்த விமானத்தின் மூலம் பொழியப்பட்ட
குண்டு மழையினால் பட்ட மரங்களாய் காட்சியளித்து.......

விடியும் ஒவ்வொரு பொழுதும் எமனுக்கு
கொண்டாட்டம்..பசிப்பிணியைப் போக்க மனித உயிரை
காவு கொண்டன ஆயுதங்கள்.....

ஆயுதங்களைப் தங்கமலைக் குவியலாய்
வாங்கி வாங்கி குவித்து பசியாலும்
யுத்தத்தாலும் கோரமாய் மரண தண்டனை
வழங்கியது அரசாங்கம்....

தீருமா இந்த யுத்தம்..
போக்குமா எம் அச்சத்தை...
துளிர்க்குமா பட்ட மரங்கள்..
நிலை நாட்டுமா வாழ்வில்
சந்தோஷத்தை இனிப் பிறக்கும்
சமுதாயமாவது யுத்த தாண்டவத்தைக்
காணாமல் பசுமையைக் காணட்டும்
வேண்டாம் இந்த யுத்தம் வளர்ப்போம்
சமத்துவத்தை......


No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்