கை வந்த கழுகுகள்

 

இறக்கை வைத்த விரியன்கள்
கண் கொத்தும் கழுகள்
பிணந்தின்னிப் பேய்கள்
உயிர் காவும் வேதாளங்கள்

இன்னும் பல பேர் தெரியா
பிரகிருதிகள் - எல்லோருக்கும்
வேணுமாம் விளையாட
எம் குழந்தைகள்

வீசிய குண்டுகளில்
அவை காவிய உயிர்கள்
எத்தனை - சென் பீட்டர்ஸ்,
செஞ்சோலை என தொடர்கதை
அவர் தம்
வெறியாட்டங்கள்

காயங்கள் கண்டதும்
காற்று மறு திசை வீசியதும்
பழங் கதை ஆயின
இன்று திறமையையும்
பலத்தையும் பரீட்சிக்கும்
புதுக் கதை, ஆம்
எங்களிடமும் கழுகுகள்.

இப்போதெல்லாம் இருட்டினாலே
சிவராத்திரியாமே உங்களுக்கு?
எத்தனை இரவுகள்
தொலைத்திருப்போம் எம்
தூக்கங்களை.
கொஞ்சம் அனுபவித்து தான்
பாருங்களேன் நாம் பட்ட
வலிகளையும்.

வாங்கிக் கட்டியதாமே
வன்னி வந்த
ஒரு பேய்க் குஞ்சு.
வரவுமில்லை
வாங்கவுமில்லை என்று
போட்டீர்களே ஒரு
அசத்தல் கரணம்.

சிறகிழந்த பறவையை
நீ மறைக்கலாம்.
சிறகுவிரித்த எம் மறவரை
நீ மறக்கலாமோ?

இறுதியாகச் சொல்கிறோம்
உங்கள் பிஞ்சுகளைக்
கொத்தா எங்கள் கழுகுகள்
இல்லாது போனால்
இல்லாமலே போய்விடுமே
வித்தியாசம்
உங்களுக்கும் எங்களுக்கும்

No comments:
Write comments

விடியும் வரை

அதிகம்

தேடல்