கூனுமா தமிழன் வீரம்?

தூற்றினார் தமிழை என்னும்
துடித்திடும் சேதி கேட்டு
மாற்றலர் மண்ணில் பாய்ந்து
மானத்தைக் கல்லாய் மாற்றி
ஏற்றினான் சேரன் ஆங்கே
எதிரியின் தலைமீ தென்ற
கூற்றினைக் கேட்ட பின்னும்
கூனுமோ தமிழன் வீரம்?

பறித்திடத் தமிழன் மண்ணைப்
பரங்கியர் வந்த வேளை
தறித்தவர் தலைகள் கொய்து
தன்வலி காட்டி நின்ற
மறப்புலித் தேவன் வீரன்
மரபினில் வந்த நம்மோர்
துரத்துது குண்டென் றாலும்
துணிவிழந் தோடுவாரோ?

உற்றசெந் தமிழி னத்தை
ஒழித்திட முரசம் ஆர்த்த
துட்டகை முனுவின் கொட்டம்
தூள்படச் செய்வே னென்று
கட்டுடல் தளர்ந்த போதும்
கைதனில் வாள்பிடித்த
கொற்றவன் எல்லாளன் தன்
கூட்டமோ அடிமையாகும்?

மொழி நிலம் தமிழச்சாதி
மூன்றையும் இன்னல் வந்து
தழுவுமா? தழுவ வந்தால்
தமிழ்க்குலம் புயலாய் மாறும்!
வழிவழி வந்த வீரம்
வருவதை ஒருகை பார்க்கும்!
எலிகளும் தமிழர் மண்ணில்
எழும்! பகை ஓட்டி வைக்கும்!

எக்களிப்பு

குளித்து வந்தான் எழுபரிதி!

தங்கத் தழல் ஒளியில்
பூத்ததடா தமிழ் ஈழம்!

பொங்குபோர் ஆடிவர
இளம்புலிகள் புறப்பட்டார்....

சங்கொலியும் முழவொலியும்
கேளீரோ தமிழ்மக்காள்!

எங்கள் அருந் தமிழ்மண்ணில்
இராவணனார் பொன் மண்ணில்

அங்குலமும் இனி நாங்கள்
அயல் வெறியர் ஆளவிடோம்!

கங்குல் விலகின காண்!
எங்கள் தமிழ் மேல் ஆணை!

தங்கத் தமிழ் ஈழம்
தமிழனுக்கே! தமிழனுக்கே!

மூச்சுடையீர்! தமிழரே!
முன்வாரீர்! இனியும் வாய்

வீச்சினிலே நாள் கடத்தி
விளையாடல் வேண்டாங்காண்!

மேய்ச்சலிலே போன துகள்
ஆள்வோரின் தொழுவத்தில்

பூச்சி புழு வைக்கோலும்
பிண்ணாக்கும் விழுங்கட்டும்!

கூச்சமுடையோம் நாங்கள்
குலமானம் ஒன்றுடையோம்!

சீச்சீ.. அட தமிழா!
சிறப்பிழந்து வாழ்வோமா?

ஆச்சி! உன் பிள்ளையை
ஆடவிடு போர்க் களத்தே!

போச்சுதடி பழங் காலம்!
பூத்தது பார் தமிழ் ஈழம்!

நாம் பிறந்த நம் மண்ணில்
நாமே இனி அரசர்!

கூம்புகரம் இங்கில்லை!
குனிந்த தலை இன்றில்லை!

பாம்புக்கும் முதலைக்கும்
பணிந்து தலைவணங்கித்

தேம்பி இனித் தமிழன்
திரிவதில்லை...! போர்க்களத்தில்...

மாம்பழம் போல் குண்டுவரும்
மார்பினிக்க நாம் உண்போம்!

சாம் பொழுதும் தமிழரசு
தனைநிறுவி உயிர்விடுவோம்!

ஆம் தமிழா! அதோ பாராய்...
அரும்பியது தமிழீழம்!

மேம்பட்டான் தமிழ்மறவன்!
வீரன் தோள் வாழியவே!

அழுகின்றோம் அழுகின்றோமே!

இலையொன்று வீழ்தல் கூடும்
இறகொன் றுதிர்தல் கூடும்
மலையொன்று சாய்வ துண்டோ?
மானத்தர் தமிழீ ழத்தில்
தலையொன்று வீழ்ந்த தையா!
தந்தை செல்வாவைக் கால
அலையொன்று சாய்த்த தையா!
அழுகின்றோம்... அழகின் றோமே!

மொழி இனம் நாடு மூன்றும்
மூச்சாக வாழ்ந்தார் ஐயா!
இழிவாகும் மாற்றினத்தார்
எமை ஆள்தல் என்றார்! எங்கள்
விழிதனைத் திறந்து வைத்தார்!
தனிவிழி மூடி இன்றேன்
அழிவெனும் சாவில் வீழ்ந்தார்?
அம்மவோ! எதுயாம் செய்வோம்?

வஞ்சினம் உரைத்தெழுந்து
வண்டமிழ் ஈழம் வாழ
நஞ்சினர் முன்அறப்போர்
நடத்திய எங்கள் தந்தை
துஞ்சினர்... உலக வாழ்வு
துறந்தனர் எனவந் தெங்கள்
நெஞ்சினில் பாய்ந்த சேதி
நெருப்பினைவார்த்த சேதி!

முடிஇலா அரசர் ஐயா
முழுச்செல்வர் எனினும் வாழ்வில்
கொடியவெஞ் சிறையிருந்தார்!
கொலைவெறிச் சிங்க ளத்தர்
பிடிநின்று தமிழ்மண் காக்கும்
பெரும்போரில் தனைஅழித்தார்!
விடிவொன்று காணுமுன்னம்
வீழ்ந்தாரே... விம்முகின்றோம்!

எந்தையின் கொள்கை என்றும்
ஈழத்தார் வாழ்வாய் நிற்கும்!
செந்தமிழ் ஈழ மண்ணில்
செல்வா கால்தட மிருக்கும்!
சிந்தையில் அவர்பொன் மேனி!
சிலைபோல நிலைத்திருக்கும்!
அந்த நாள் அவர்வாய்ச் சொற்கள்
அழியாதெம் காற்றில் வாழும்!

இனமானப் புலி எங்கே?

இன்றிருந்த பகல்தனிலே
ஞாயிறில்லை!
இரவினிலும் நிலவில்லை!
விண்மீன் இல்லை!
இன்றெரிந்த விளக்கினிலே
வெளிச்சம் இல்லை!
எண்டிசையும் செடிகொடியில்
பூக்கள் இல்லை!
இன்றிதழ்கள் ஒன்றிலுமே
முறுவல் இல்லை!
இன்றெமது நாட்டினிலே
பெரியார் இல்லை!
எவர்தருவார் ஆறுதல்? இங்
கெவரும் இல்லை!

கோல்தரித்து நேற்றுலகைத்
தமிழன் ஆண்டான்!
கொற்றவனை அவனை இழி
வாக்கி மார்பில்
நூல்தரித்து மேய்ப்போராய்
நுழைந்த கூட்டம்
நூறு கதை உருவாக்கி
"பிரம்ம தேவன்
கால்தரித்த கருவினிலே
தமிழன் வந்தான்
காணீர் என்றுரைத்தமொழி
கேட்டுக் கண்ணீர்
வேல்தரித்து நெஞ்சில் வெந்
தழல் தரித்து
வெகுண்டெழுந்த பெரியாரை
இழந்து விட்டோம்!

அஞ்சுதலும் கெஞ்சுதலும்
அறியா வீரர்
அறவலியும் மறவலியும்
நிறைந்த செம்மல்
நெஞ்சுரமும் நிமிர்நடையும்
படைத்த வல்லான்
நிறைமதியும் போர்க்குணமும்
இணைந்த ஆற்றல்
துஞ்சுதலும் உடற்சோர்வும்
இலாப் போராளி
தொடுபகையும் சூழ்ச்சிகளும்
உடைத்த சூறை
நஞ்சரையும் வஞ்சரையும்
மிதித்த வேழம்
நடுவழியில் எமைநிறுத்தி
நடந்ததெங்கே?

ஏடு படைப்போம்!

பாண்டிய மன்னவன் சோழன் பனிவரை
பாய்ந்து கலக்கிய சேர மகன்

ஈண்டு முளைத்த குலத்தில் எழுந்தனை!
ஏடா தமிழா! எடடா படை!

கூண்டுக் கிளிநிலை எத்தனை நாள்வரை?
கூப்பிடு கூப்பிடு வீரர்களை!

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை
ஆள நினைப்பதில் என்ன குறை?

கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு!
குருவிக்குக் கூடு மரத்திலுண்டு!

காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு!
கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு!

கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர்
குலத்துக்கொரு புகல் இங்கிலையோ?

நாட்டை அமைப்பாய் தமிழ்மகனே! புவி
நடுங்கப் புயல்போல் நடைகொளடா!

மானம் அழைத்தது! வீரம் அழைத்தது!
மலைத்தோள் இரண்டும் எழவில்லையோ?

ஊனத் தசைதான் தமிழுடலோ? அட
உணர்ச்சி கடவுள் தரவில்லையோ?

ஏனம் சுமந்து பிழைப்பதற்கோ பிறன்
எச்சில் பொறுக்கவோ தமிழரினம்?

ஈனச் சரிதை கிழியப் புதியதோர்
ஏடு படைப்போம்! எழுதமிழா!

பிடி சாபம்!

கன்னெஞ்சர் சிங்களத்தர்
கயவர் என் தமிழ்ஈழத்தை
அன்னை மண்ணைச் செந்தீயால்
அழித்தார் என்றெழுந்த சேதி
மின்னலாய்த் தாக்கிற்றம்மா...
விம்மிநின் றழுகின்றேன் யான்!
என்கண்ணில் நீரா? இல்லை!
இதுவும் தீ! இதுவும் தீயே!

யாழ்நகர் நல்லறங்கள்
யாவிலும் ஊறி மக்கள்
வாழ்நகர் தமிழர் வாழ்வில்
வற்றாத கல்வி மேன்மை
சூழ்நகர் கொடியர் தீயில்
துகள் சாம்பலாகி அந்தோ
பாழ்நகர் ஆன தென்றார்!
பதறுதே தமிழ் நெஞ்சம்!

வீடுகளெல்லாம் தீயால்
வீழ்த்தினார்! கடைகளெல்லாம்
கேடுற நெருப்பு வைத்தார்!
கீழ்மன வெறியர் எங்கள்
பீடுறு யாழ்மா நாட்டின்
பெரியநூல் நிலைய மீதும்
போடுசெந் தீயை என்றார்...!
பொன்னூல்கள் எரித்தார்! சென்றார்!

அம்மம்மா! என்ன சொல்வேன்?
அனலிலே கம்பன் மாண்டான்!
இம்மா நிலம் வணங்கும்
இனியவள் ளுவன் மடிந்தான்!
"உம்"மென எழுந்த தீயில்
உயர் தமிழ் இளங்கோ செத்தான்!
செம்மனப் புலவ ரெல்லாம்
செந்தீயில் வெந்தா ரம்மா!

கொடுந்தீயே! சிங்களத்தின்
கொடுந்தீயே! இது நீ கேளாய்!
நெடுங்காலம் நின்றன் கொட்டம்
நில்லா! இப்புலவன் உன்மேல்
இடுஞ்சாபம் இன்றே ஏற்பாய்!
இருந்துபார்! நீஇம் மண்ணில்
படும்பாடு நாளை பார்ப்பேன்...!
பார்த்தே நான் உலகு நீப்பேன்!

நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!

செந்தமிழர் மாவீரர் வன்னியசிங் கத்தை நாம்
வெந்தழலில் வைத்தோம்... விடுதலையே
சிந்தனையாய்
நின்றார் அறவீரர்! அன்னார் உயிர் நீஏன்
கொன்றாய்? கொடுஞ்சாவே கூறு!

அஞ்சிப் பகைவர் அதிர்ந்து நிலைகுலைய
நெஞ்சில் கனல்தாங்கி நின்றானை
வெஞ்சிறையில்
பொன்னாய்ப் பழுத்த புகழுக்குரியானை
எந்நாள்யாம் காண்போம் இனி?

பாரில் தமிழர் படைவெல்லப் போராடி
போரில் கொடுமை பொழுதெல்லாம்
நேரில்
விருப்பாய் மகிழ்ந்தேற்ற வீரர் மறைந்தார்!
நெருப்பாய் எரிகிறதே நெஞ்சு!

ஆற்றல் மிகுபேச்சால் ஈழத்திலே சூறைக்
காற்றை எழுப்பியவன் கண்துயின்றான்!
நாற்றிசையும்
பொங்கு தமிழ்முழக்கம் செய்த களத்தின்போர்ச்
சங்கை நொறுக்கியதோ சாவு?

கண்ணின் மணித்தலைவர் செல்வா வழிகாட்ட
மண்ணில் அவர் கொள்கை மணிவிழியாய்
எண்ணி
இனம்வாழ வாழ்ந்தார் இலையே எவ்வண்ணம்
மனம்தோறும் எங்கள்தாய் மண்?

குரல் நிறுத்திய குயில்

கழுத்து நிமிர்ந்த தமிழின வேங்கை
கனலாய் வாழ்ந்த தமிழன்
எழுத்து நிமிர்ந்த பாடல் படைக்கும்
எழுச்சிப் புலவன் வீரம்
பழுத்து நிமிர்ந்த புரட்சிச் செம்மல்
பாயும் புயலாய் எம்மை
இழுத்து நிமிர்ந்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!

போற்றப் பிறந்த களத்தின் பொருநன்
புன்மை உற்றிழந்த எம் வாழ்வை
மாற்றப் பிறந்த மாபெரும் ஆற்றல்
மறந்திகழ் இனப்போர் மண்ணில்
ஆற்றப் பிறந்த அருந்தமிழ் வீரன்
ஆரியர் நெஞ்சில் கூர்வாள்
ஏற்றப் பிறந்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!

பீடு படைத்த புலவன் மதத்தைப்
பிளந்த சூறைக் காற்று
கேடு படைத்த மடமைக் குப்பைக்
கிடங்கை எரித்த நெருப்பு
நாடு படைத்த நல்லறி வாளன்
நஞ்சர் நெஞ்சை நொறுக்கி
ஏடு படைத்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!

மனத்தை வளர்த்த மாந்தர் நேயன்
மண்ணில் நாளும் மண்டைக்
கனத்தை வளர்த்த வல்லாண் மையினர்
கழுத்தை முறித்தோன்! அடிமைத்
தனத்தை வளர்த்த தளைகள் அனைத்தும்
தறித்த போர்வாள்! மாந்தர்
இனத்தை வளர்த்த பாரதி தாசன்
இலையே! இலையே! இலையே!

பொங்கி வாடா!

தீயெழுந்து அடுப்பினிலே பாலைச் சுட்டால்
சினந்தெழுந்து பால்பொங்கித் தீயணைக்கும்!
நீ உவந்து செய்கின்ற பொங்கல் வெற்று
நிகழ்வன்று.... வீரத்தின் பாடம் கண்டாய்!
தாயிழந்த சேயர்போல் தமிழர் ஈழம்
தனையிழந்து சினங்கொண்டு பொங்குகின்றார்!
பாய்! சிவந்து களமாடு! பொங்கி வாடா!
பகைநொறுக்கித் தமிழீழ மண்ணை மீட்போம்!

திரைப்படத்தின் மார்புகளைத் தின்னும் கண்ணால்
தீந்தமிழ்த்தாய் ஈழத்தில் சாவின் வாயில்
இரைப்படப்போய் விழும்புலிகள் களத்தின் புண்கள்
இருந்த மலை மார்புகளைப் பார்ப்பாய்! ஆங்கே
நிரைப்பட நாளும் களத்தை நிறைத்தார் வீரர்!
நீ என்னடா இங்கே கிழித்தாய்? வீழ்ந்து
தரைப்பட நீ கிடக்கின்றாய்! பொங்கி வாடா!
தமிழீழம் மலர உடன் ஆணை ஏற்போம்!

நேற்றுவரை உனக்குதவி நின்ற மாட்டை
நேர்நின்று மோதுகிறாய்.... தமிழீழத்தில்
நாற்றிசையும் குண்டுகளால் உன்இனத்தை
நாளும் அழிக்கின்றார்.... நீ மோதினாயா?
போற்று தமிழ் இனமானம்! தமிழனாய் நீ
பொங்கல் செய்! விழித்தெழுவாய்! வீறுகொண்டு
காற்றெழுந்தால் புயலாகும்! பொங்கி வாடா!
களம் காண்போம்! தமிழீழம் காப்போம்! காப்போம்!

களம் புகுவாய்!

மானம் எனுமொரு பானையில் வாழ்வெனும்
தீனி சமைத்தவனே! - தமிழ்
போனதடா சிறை போனதடா! அட
பொங்கி எழுந்திடடா!

காட்டு தமிழ்மறம்! ஓட்டு வரும்பகை!
பூட்டு நொறுக்கிடுவாய்! - நிலை
நாட்டு குலப்புகழ்! தீட்டு புதுக்கவி!
ஏற்று தமிழ்க் கொடியே!

முந்து தமிழ்மொழி நொந்து வதைபட
இந்தி வலம் வரவோ? - இது
நிந்தை! உடனுயிர் தந்து புகழ்பெறு!
வந்து களம் புகுவாய்!

நாறு பிணக்களம் நூறு படித்தநம்
வீறு மிகுந்த குலம் - பெறும்
ஊறு துடைத்திடு மாறு புறப்படு!
ஏறு நிகர்த்தவனே!

நாலு திசைகளும் ஆள நடுங்கிய
கோழை எனக்கிடந்தாய்! - மலைத்
தோளும் குனிந்தது போலும்! விழித்தெழு!
காலம் அழைக்குதடா!

விடியும் வரை

அதிகம்

தேடல்