வாடகைத் தாயின் மார்பில்
அனாதைக் குழந்தைகளாய்
அகதிகள்.
எரிக்கப்பட்ட கூட்டிலிருந்து
இரை தேடி வரும் ரணம் பூசிய
சிறகுகள்.
பனை மரங்கள்
துப்பாக்கிகளாய் வெடிக்க
தேயிலை புகையிலையாய் கசியும்.
சமாதானப் புறாவின்
சவத்தில்
சிவப்புக் கொடி.
கிரிக்கெட் ஆட்டம் நின்றுபோனால்
இன்னொரு நாள்
வைத்துக்கொள்ளலாம்.
கோயிலுக்குள் குண்டு வெடித்தால்
இன்னொரு கடவுள் சிலையை
வாங்கிக்கொள்ளலாம்.
வகுப்பறையில் குண்டு வெடித்தால்
எப்படி முளைக்கவைப்பது
இன்னொரு சீருடைச் செடியை?
ஊரே அழுகிறது
எதற்கு ஊரடங்கு?
ஒரு துளி நிலத்தில்
கடலளவு கல்லறைகள்.
மண்டை ஓடுகள்
எல்லைக் கோட்டை அழிக்கட்டும்.
பிணங்களின் கனவுமெய்ப்பட வேண்டும்.
ராமேஸ்வரத்தில் ஒதுங்கிய
தமிழர்கள்
தாய் மண்ணுக்குத் திரும்பும்போது
தேசியகீதம்தாய் மொழியாகட்டும்.
ரத்தத்தில் மூழ்கிய
பேனாவிலிருந்து
துளித் துளியாய்
கரைகிறது
No comments:
Write comments