எனது பெயர் காலமுனி
நானின்றேல் உலகினிலோர்
இயக்க மில்லை!
மனித உயிர் படும் பாடும்
மாநிலத்தில் உருவாகும்
மயக்கம் யாவும்
எனதிறைவன் அறிவதுபோல்
இன்னொருவன் அறிவதெனில்
அவன் யானன்றோ?
பனி மலையும் காடுகளும்
அலைந்து வரும் படைநிலையும்
அறிவேன் மக்காள்!
தோளுயர்த்தி உலகாண்ட
தமிழ்ச்சாதி துடிதுடித்து
மாற்றார் தம்மின்
தாளடிக்கீழ் மடிகின்ற
பேரவலம் தாங்காமல்
முழக்கமிட்டு
மாளடித்தால் அடிக்கட்டும்
எனச் சொல்லி விடுதலைக்கு
மார்பு காட்டி
வாளெடுத்துத் தலை தூக்கி
வந்துள்ளீர் நுந்துணிவை
வாழ்த்துகின்றேன்!
செருக்களத்தில் முன்னொருநாள்
மோரியரைச் சிதறடித்தான்
இளஞ்சேட் சென்னி!
பொருப்பெடுத்த தோளுடையான்
குட்டுவனோ வட நாட்டுப்
போரில் வென்றான்!
உருக்கமிலா மாற்றாரைச்
சுந்தர பாண்டியன் ஒருநாள்
அடக்கி ஓய்ந்தான்!
நெருப்பெழுந்த விழியோடு
தமிழ்மறவர் பொருத கதை
நிறைய உண்டே!
முத்தமிழர் வரலாற்றில்
நேற்றுவரை மூண்டெழுந்த
கொடிய போர்கள்
அத்தனையும் யானறிவேன்
தமிழ் மக்காள்... ஆனாலும்
ஒரு சொற் கேளீர்...
பத்தல்ல நூறல்ல
கோடிமுறை போர்க்களங்கள்
பார்த்தேன்... ஆனால்
இத்தகைய படையொன்றை
மாநிலத்தில் இற்றைவரை
கண்டேனில்லை!
வீட்டினிலே பசித்திருந்து
மனையாட்டி வற்றிவிட்ட
வெறும் முலைக்கு
நீட்டுகின்ற பிள்ளையின் கை
தடுத்தழுவாள் என்பதையும்
நினைந்திடாமல்
வாட்டுகின்ற கொடிய பிணி
வறுமையிலுந் தன்மானம்
பெரிதாமென்று
பூட்டுடைத்து விடுதலை நாள்
கொண்டுவரப் புறப்பட்டீர்...
பூரிக்கின்றேன்!
இறப்பதற்கும் சொத்தெல்லாம்
இழப்பதற்கும் அடியுதைகள்
ஏற்பதற்கும்
மறப்போரில் உடற்குருதி
கொடுப்பதற்கும் மலைத்தோளின்
கீழே தொங்கும்
சிறப்புமிகு தடக்கைகள்
அறுந்துபட முழுக்கமிட்டுச்
சிரிப்பதற்கும்
புறப்பட்டீர்... அடடாவோ!
தமிழினத்தின் போர்த்திறத்தை
வாழ்த்துகின்றேன்!
முன்பொருநாள் அரசோச்சி
நானிலத்தின் முறைகாத்த
தமிழர் பண்பை
நன்கறிவேன்! அந்நாளில்
உளம் வருந்தி நலிவுற்றார்
எவருமில்லை!
அன்புடையார் தமிழ்மக்கள்
அவர்மாட்டே நிலைத்திருக்கும்
சிறந்த கொற்றம்
என்பதனால் தமிழாட்சி
வையகத்தில் எழுவதை நான்
அவாவுகின்றேன்...
இப்புவியில் தமிழினத்தார்
பகைவிரட்டி அரசமைப்பார்
எனிலிவ் வையம்
அப்பொழுதே நல்லறத்தின்
வழிநடக்கும்... குறள் படித்தோர்
அமைச்சராவார்!
தப்புமுறை அடக்குமுறை
தறுக்கர்களின் கொடுமையெலாம்
சாய்ந்து போகும்!*
ஒப்பரிய தமிழ்ச்சாதி
எண்டிசையும் உலகினுக்கே
தலைமை தாங்கும்!
கதவு திறந் திருப்பதனைக்
காண்கின்றேன்.... தமிழ்மக்காள்
எனினும் நீவிர்
புதுமனையுள் விடுதலையின்
மாளிகையில் புகுவதெனில்
தடையொன் றுண்டாம்...!
விதியெனுமோர் கொடுங்கிழவி
இடர் புரிவாள்... தமிழினத்தை
விழவும் வைப்பாள்....
எதுவரினும் அஞ்சாதீர்!
எனமொழிந்து காலமுனி
இன்னும் சொல்வான்...
கால முனிவன் கூற்று

About Eelam
Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.
அதிகம்
-
தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு - எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு கடல் சூழ்ந்த யாழ்பாணம் படகு போல் இருக்கும்! கரை மணலில் நண்டு ஏதே...
-
தமிழே! உயிரே! வணக்கம்! தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்! அமிழ்தே! நீ இல்லை என்றால் அத்தனையும் வாழ்வில் கசக்கும்! புளிக்கும்! தமிழே!...
-
என்னடா தோழா செருக்களமா? அட எங்கேயடா? எனக் கூவி சொன்னவன் நின்ற மலை முடியின்மிசை துள்ளி அவாவுடன் தாவி என்னிரு கண்கள் எதிரினிலே தொலை இடத...
-
தேனைப் பொழிந்தும் கணிகள் சொரிந்தும் செங்கரும்பைப் பிழிந்தும் ஆநெய் கறுவாஏலம் கலந்தும் அமுதாய்த் தமிழ்ப் புலவன் ஊனை உயிரை உருக்கும் தமி...
-
முடங்கி வளைந்த முதுகே! நிமிர்வாய்! நடுங்கிக் கிடந்த நாட்கள் தொலைந்தன! காய்ந்த தமிழன் கண்ணை விழித்தான்! தேய்ந்த வீரம் திரும்பி வந்தது! நி...
-
முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசி னோடு கொடியோடு மாற்றார்முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு படையோடு தனியான பண்போடு பிறநாடு...
-
தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! தலைமீது சுமக்கின்றான் அடிமை என்னும் சொல்லை! தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை! எதிரியைத் தலைவனாய் எண்ணுக...
-
(02-11-2007 வெள்ளி காலை 06.10 மணியளவில் சிறீலங்கா அரச பயங்கரவாதிகளின் வான்குண்டு வீச்சு தாக்குதலில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்...
No comments:
Write comments